சீனாவின் தமிழ்க் கல்வெட்டு


கடாரத்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee




                    இந்தக் கல்வெட்டு சீனாவில் கண்டெடுக்கப்பட்டது.
                    கேண்ட்டன் என்னும் நகரம் தென்சீனாவின் மிக முக்கியமான பட்டினம். அது பெருந்துறைமுகமாகவும் மாநகரமாகவும் வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கியது. உலகின்
பல நாடுகளுடன் கேண்ட்டன் தொடர்புகொண்டிருந்தது.

                    இந்தக் கல்வெட்டு கேண்ட்டன் நகருக்கும் வடக்கே 500 மைல் தூரத்தில் உள்ள
ச்சுவான் ச்சௌ என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.



                    ச்சுவான் ச்சௌ என்பதும் ஒரு முக்கிய துறைமுகப்பட்டினமாக ஒரு காலத்தில் விளங்கியது.
                    தமிழகத்துக்குச் சீனாவுடன் நேரடியாகவும் மற்ற நாடுகளின் மூலமும் நெருங்கிய தொடர்பு இருந்தது.
                    தமிழகத்திலிருந்து கப்பல்கள் சீனாவுக்குச் செல்வதாக இருந்தால் ஆடி மாதத்தில் புறப்படுவார்கள். தாய்லந்திலுள்ள தக்குவாப்பா என்னும் பட்டினத்துக்குச் செல்வார்கள். அங்கிருந்து தாய்லந்தின் (Isthm us of Kra) க்ரா நிலச்சந்தியைக் குறுக்கே கடந்து அதன்
கிழக்குக் கரையில் இருக்கும் தர்மராஜநகரம் போன்றவற்றுக்குச் சென்று, அங்கிருந்து காம்போஜத்தின் பட்டினங்களுக்குக் கப்பலில் செல்வார்கள். அங்கிருந்து சீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்.

                    கடல்வழியாகவே நேரடியாகச் செல்லவேண்டுமென்றால் தக்குவாப்பா , கடாரம்
வழியாக மலாக்கா ஜலசந்தியைக் கடந்து தென்சீனக் கடலைக் கடந்து கேண்ட்டனை அடையவேண்டும். இது ஓராண்டுக்கு மேல் பிடிக்கும். பருவநிலக்கோளாறுகள் இருந்தால்
சில சமயங்களில் மூன்றாண்டுகள்வரை ஆகும்.

    
                    கேண்ட்டன் முதலிய பட்டினங்களில் தமிழர்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். குறிப்பாக வர்த்தக நிறுவனங்களும் கூட்டுறவுக்கழகங்களும் வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், சித்திரமேழிப் பெரியநாட்டவர், மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார் போன்றோர் அவ்வகையில் முக்கியமானவர்கள்.

                    ச்சுவான் ச்சௌ பட்டினத்தில் ஒரு சிவன் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் சிவனுடைய திருவுரு எழுந்தருளுவிக்கப்பட்டது. இது செகசைக்கானுடைய '·பர்மான்' மூலம் ஆணையிடப்பட்டது. '·பர்மான்' என்பது அரச ஆணை அல்லது பிரகடனம்.
                    இந்தத் திருப்பணி செகசைக்கானுடைய ஆரோக்கியத்துக்காகச் செய்யப்பட்டது.
                    இந்தக் கல்வெட்டில் காணப்படும் பெயரான 'செகசைக்கான்' என்பது மாங்கோலியர்களுடைய தலைமைக் கான் ஆகிய சீனாவின் சக்கரவர்த்தி குப்லாய்க் கானுடைய பெயர்.
                    அவருடைய முழுப்பெயர் குப்லாய் ஸெக்செஞ் கான்.
                    ஸெக்செஞ் கான் என்பது தமிழில் செகசைக் கானாக மாறிவிட்டது
             
                    அந்த சிவன் கோயிலின் பெயர் திருக்கதலீஸ்வரம். அதில் உறைந்த சிவனின் பெயர் திருக்கதலீஸ்வரமுடைய நாயனார்.
                    அந்த ·பர்மானின் - உத்தரவின்படி செயலாற்றியவர் பெயர் தவச் சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள்.
                    இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டது சக சகாப்தம் 1203-ஆம் ஆண்டு சித்திராபௌர்ணமி தினத்தன்று. அதாவது  கி.பி. 1281.               
                    இது குப்லாய்க்கானுடைய ஆட்சிக்காலம். அவர் 1260-இலிருந்து 1294 வரைக்கும்
ஆட்சியில் இருந்தார்.

                    இந்த இடத்தில் மாங்கோல்களைப் பற்றியும் குப்லாய்க் கானைப் பற்றியும்..........



                    மாங்கோல் இனத்தவர் சிறு சிறு நாடோடிக் கூட்டங்களாக மத்திய ஆசியாவின்
ஸ்டெப்பி என்னும் புல்வெளி வனாந்தரங்களில் திரிந்தவர்கள். அவர்களுக்குப் போர்க்குணம் மிகுதியாக இருந்தது. அவர்களின் ஜனத்தொகை ஒரு கட்டத்தில் அதிகரித்துவிட்டது.     


                    அந்தச் சமயத்தில் அவர்களிடையே ஒரு பெரிய தலைவர் தோன்றினார். தெமூஜின்
என்பது அவருடைய இயற்பெயர். பிற்காலத்தில் செங்கிஸ் கான் என்ற பெயரில் உலகப்புகழ் பெற்றவர்.
                    அவர் அனைத்து மாங்கோல்களையும் ஒன்று திரட்டி ஒரே தலைமைத்துவத்தின்
கீழ் கொண்டுவந்து, அவர்களுக்குப் போர்முறைகளையும் பயிற்சியையும் போர்த் தந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். உலகிலேயே திறமை மிக்கதாக விளங்கிய அந்த மாங்கோல் கூட்டம் மிகவும் ஒற்றுமையாக அவர் தலைமையின்கீழ் இயங்கி சீனா, பாரசீகம்,
மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பாவின் பகுதி, ரஷ்யா ஆகிய இடங்களைப் பிடித்தது.

                    இதுநாள்வரை எந்த ஒரு தனி மனிதனும் தன்னுடைய படைகளின் மூலம் இந்த அளவுக்குப் பெரும் பரப்பளவு உள்ள பூமிப்பிரதேசத்தை அவ்வளவு குறுகிய கால
கட்டத்துக்குள் கைப்பற்றியதேயில்லை.

                    மாங்கோல்களின் தனிப்பெரும் தலைவராக 'கான்களின் கான்', 'பெரும்பேர் கான்' என்னும் பட்டத்துடன் பெரும் சக்கரவர்த்திகளுக்கும் சக்கரவர்த்தியாக விளங்கினார்.
                    தெமூஜின் என்ற பெயர் மறைந்தது.
                    செங்கிஸ் கான் என்னும் பெயர் நிலைத்தது.    
              
                    அவர் இறந்த பின்னர் அவருடைய நான்கு மகன்களுக்குள் பரம்பரை உரிமைப்
போராட்டம் நிகழ்ந்தது. ஆகவே மாங்கோல்களால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. பாரசீகம், ரஷ்யா/ஐரோப்பியப் பகுதிகள், சீனா, மாங்கோலியத் தாய்நாடு
ஆகியவை.

                    ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மகனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த நால்வரில்
ஒருவர் பெரும்பேர் கானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


                    செங்கிஸ்கானுடைய பேரர் குப்லாய்க்கான். நான்காவது மகனின் மூன்றாவது மகன்.
அவர் தலைமைக் கானாகப் பிரகடனப்படுத்தப்பட்டார். அத்துடன் தமக்கென தம்முடைய
பங்காகச் சீனாவை வைத்துக்கொண்டு அங்கிருந்து அரசாண்டார்.

              
                    உலகின் வல்லரசாகவும் வளமிக்க நாடாகவும் மக்கள் எண்ணிக்கை மிகுதியான நாடாகவும் சீனாவை ஆக்கினார். பெய்ஜிங் மாநகரைத் தோற்றுவித்து, அதைத் தமது தலை
நகராக ஆக்கிக்கொண்டார். அத்துடன் கோடைக்காலத் தலைநகர் ஒன்றையும் ஏற்படுத்தினார்.

                அவருடைய படைகள் பலமும் பயிற்சியும் திறமையும் மிக்கவை. வெல்லப்பட
முடியாதவை என்று பெயர் பெற்றவை.

                    இரண்டே முறைகள்தாம் தோல்வி ஏற்பட்டது.
                    ஒருமுறை ஜாவாவைத் தாக்கக் கடற்படையை அனுப்ப ஆயத்தம் பண்ணினார். ஆனால் அந்தப் படையெடுப்பு நடைபெறவில்லை.
                    அதுவரைக்கும் யாராலும் கைப்பற்றப்படாத ஜப்பானையும் கைப்பற்ற மிகப்பெரிய கப்பல்படையையும் பல்வகைப் படைகளையும் ஜப்பானுக்கு அனுப்பினார். 'காமிகாஸே'
என்னும் விசித்திர விபரீதப் புயல்காற்று அடுத்து அனைத்துக் கப்பல்களையும் மூழ்கடித்துவிட்டது. மீதமிருந்த போர்வீரர்களை ஜப்பானியர் கொன்றுவிட்டனர்.

             
                    அவர் ஒரு மாங்கோலாக இருந்தாலும் மாங்கோலியக் கலாச்சாரத்தை ஏற்குமாறு சீனர்களை வற்புறுத்தவில்லை. சீனர்களுடைய பழைய நிர்வாகத்தையும் அவர் மாற்ற
வில்லை. ஊழல்களையும் சோம்பலையும் கலைந்து அதை இன்னும் திறமையாகச் செயல்படவைத்தார். ஒற்றாடல், செய்தித்தொடர்பு, மக்கள்தொடர்பு ஆகியவற்றிலும்
சாலைகள் போக்குவரத்து ஆகியவற்றிலும் அஞ்சல்துறையிலும் பெரும் சீர்திருத்தங்களைச் செய்தார்.

                    யுவான் என்னும் அரச மரபையும் தோற்றுவித்தார். அது சீனாவை நூறாண்டுகள் ஆண்டுவந்தது.
               
                    சீனாவின் சக்கரவர்த்தியாக இருந்தும்கூட சீன மொழியை அவர் கற்கவில்லை.
                    தமிழகத்தைப் பாண்டியர்கள் ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில்தான் அவர்
சீனாவை ஆண்டார். பாண்டியமன்னர்களுடன் அவருக்கு நேரடியான தொடர்பும் நெருங்கிய
நட்பும் இருந்தது.

              
                    ச்சுவான் ச்சௌ கல்வெட்டு எழுதப்படும்போது குப்லாய்க்கான் மிகவும் நோயுற்றிருந்தார்.
             
                    இத்தாலியிலுள்ள வெனீஸ் நகர வர்த்தகாரகிய மார்க்கோப்போலோ குப்லாய்க்
கானுடைய அவையில் விசேஷ ஆலோசகராகவும் தூதுவராகவும் பூகோளநூல்  ஆய்வாளராகவும் இருந்தார். பதினேழு ஆண்டுகள் அங்கு இருந்தபின்னர், குப்லாய்க்கான் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெனிஸ் நகரத்துக்குத் திரும்பிவிட்டார்.

               
                    அந்த சிவன்கோயில் ·பர்மான்படி திருப்பணி செய்யப் பட்டிருக்கிறது. ·பர்மான் என்பது பாரசீகச்சொல். மாங்கோல்கள் மத்தியகிழக்கு, பாரசீகம், மத்திய ஆசியா ஆகியவற்றைக் கைப்பற்றியபோது அவர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள். அப்போது முஸ்லிம்
வழக்கங்களுடன் சொற்களையும் கைக்கொண்டார்கள்.

                    கல்வெட்டின் கடைசி வரி சீன மொழியில் இருக்கிறது.
                    சோழர்கள் பாணியிலுள்ள சிலைகளும் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
                    இந்தக் கல்வெட்டு தமிழகத்துக்கு வெளியே காணப்பட்ட அரியதொரு தமிழ் மொழிக் கல்வெட்டு.

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU