POSITIVISM

கிழட்டு மாடு


            அந்த செக்குக்கார வாணிகனிடம் சில செக்கு மாடுகள்  இருந்தன.    
            அவற்றில் ஒன்று கிழண்டுபோய்விட்டது. அதனால் வேகமாக நடக்கமுடியாது. பின்னங்கால்களில் மூட்டுவீக்கம்.  மாட்டு வாகடர் பார்த்துவிட்டு, அது முதுமையினால் ஏற்படுவது  என்று சொல்லிவிட்டார். செக்காரனுக்கு ஒரே கவலை. அந்த மாட்டை என்ன செய்வது? ரொம்பநாட்களாக வைத்திருந்த மாடாகையால் அதனை அடிமாடாகக் கொடுக்கமனம் வரவில்லை. ஏதோ.....வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான்.

            அவனுடைய செக்குக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருந்தது.  அது மிகவும் பழைய கிணறு. அவனுடைய பாட்டன் பூட்டன் காலத்துக் கிணறு. கைப்பிடிச்சுவர்கள் எல்லாம் எந்தக் காலத்திலேயோ இடிந்துபோய்விட்டன. கிணற்றுக்கு அடியில் தண்ணீர்கூட வற்றிப்போய் விட்டிருந்தது.

            ஒருநாள் அந்த மாடு கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

            விழுந்த வேகத்தில் மயங்கிவிட்டது. அப்படியே கிடந்தது.

            செக்காரன் அக்கம்பக்கத்து ஆட்களையெல்லாம் உதவிக்குக் கூட்டிவந்தான்.
            நிலைமையை எல்லாரும் ஆலோசித்துப்பார்த்தனர்.
            மாடும் கிழம்; கிணற்றுக்குள் விழுந்ததில் அடிபட்டுப் போயிருக்கிறது.  அனேகமாக இறந்துவிடும். அல்லது இறந்துபோய்விட்டிருக்கும்.  மாட்டை வெளியில் எடுப்பதும் அவர்களால் முடியாத காரியம்
            கிணறோ பழங்கிணறு; பாழடைந்தது. அதனைத் தலைமுறை  தலைமுறையாக யாரும் செப்பனிடவில்லை. இப்போதும் அதனைச் செப்பனிட்டு, ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் இன்னும் ஆபத்துத்தான்.

            ஆகவே மாட்டையும் உள்ளேயே வைத்துக் கிணற்றை மண்ணால் மூடிவிடுவது என்று தீர்மானித்தனர்.

            உடனே அனைவரும் மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள்    போடலாயினர்.

            மாட்டின் முதுகில் மண்விழுந்தது. அதற்கு உணர்வு வந்துவிட்டது.  
            என்ன நடக்கிறது என்பதை ஊகித்து அறிந்துகொண்டது.

            இப்படியாக மண்மூடி மடிவதில் அதற்கு இஷ்டமில்லை.
            ஆகவே முதுகில் விழுந்த மண்ணை உலுக்கி உதறி விட்டது. மண் மாட்டின் காலடியில் விழுந்தது.
            அந்த மண்ணின்மீது மெதுவாக ஏறி நின்றுகொண்டது.

            அடுத்தாற்போல மேலும் மேலும் மண்ணை வெட்டிப்போடப் போட, மாடு மேலும் மேலும் மண்ணை உதறி விட்டுக் காலடியில் போட்டு அதன்மேல் மிதித்து ஏறி நின்றுகொண்டது.

            வெட்டிப்போட்ட மண்ணால் கிணற்றின் தூர் மூடப்பட்டு, மண்ணின் மட்டம் ஏறிக்கொண்டே வந்தது. அதன் மட்டம் ஏற ஏற அதன்மீது மாடும் ஏறிக்கொண்டுவந்தது.

            ஓரளவுக்கும் எட்டும் அளவு வந்தவுடன் அந்த மாடு, தன்னுடைய வாதக்காலையும்  மறந்து, ஒரு எம்பு, தன் வாழ்நாளில் அதுவரை எம்பாததையெல்லாம் சேர்த்துவைத்து பலத்தையெல்லாம் திரட்டி மூச்சுப்பிடித்து ஒரு எம்பு எம்பித் தாவியது. தாவி, அப்படியே கிணற்றுக்கு வெளியில் வந்து நின்றது.

அன்புடன்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU