மனமும் மருத்துவமும் #1

 கடாரத்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



                    நாட்டு வைத்திய வட்டங்களில் பல கதைகள் வழங்குகின்றன.
                    'நாட்டுவைத்தியம்' என்று இங்கே நான் குறிப்பிட்டுள்ளது ஆயுர்வேதம், சித்தவைத்தியம், வீட்டு வைத்தியம் எனப்படும் கைப்பக்குவமாகச் செய்துகொள்ளும் மருத்துவம் போன்றவற்றைக்
குறிக்கும்.
                    அகத்தியத்தில் தேரையர் சம்பந்தமாக ஒரு கதையைச் சொல்லியிருந்தேன்.
                    இந்தக் கதைகளில் ஏதாவது ஓர் ஆழமான கருத்து அல்லது தத்துவம் பொதிந்திருக்கும்.

                    அருவருப்பு இருக்கக்கூடியவர்கள் அடுத்த மெயிலுக்குப் போங்கள்.

                    ஒரு ஊரில் ஓர் ஆசாமி.
                    ஒருநாள், அவன் மனைவி சமைத்தபோது, உணவில் ஒரு பல்லி விழுந்துவிட்டது.
உணவை எறிந்துவிட்டு வேறு உணவு தயாரிக்க எண்ணியிருந்தாள். அதன் நிமித்தம் உணவுப்பொருள்கள்
எடுத்துவரச் சென்றிருந்தாள்.

                    பல்லியில் விஷம் இருக்கிறது என்று பொதுவாக நம்புவார்கள். பல்லியின் எச்சத்திலேயே விஷத்தனை இருப்பதாகவும் சொல்வார்கள். அது பட்ட இடம் அப்படியே பொரிந்துபோய் விரைவில் ஆறமாட்டாது என்று நம்புவார்கள்.
                    Allergy, Eczema, Weeping Ulcer போன்ற சங்கதிகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றுக்கும் மனதுக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.    
                    அது ஒரு பக்கமிருக்கட்டும்.

                    இந்த விஷயம் - அதாவது சாப்பாட்டில் பல்லி விழுந்த விஷயம் - அவனுக்குத் தெரியாது.
                    அவனுக்கு இருந்த பசியில் சாப்பாட்டை இலையில் வைத்துக்கொண்டு கவளம் கவளமாக விழுங்கிவைத்தான்.
                    திரும்பிவந்த மனைவி, அலறி அடித்துக்கொண்டு, "அந்த உணவைச் சாப்பிடாதீர்கள்.
பல்லி விழுந்துவிட்டது", என்று தடுத்தாள்.

                    அரண்டு போன கணவன் உடனேயே வாந்தி எடுத்தான்.
                    ஆனால் கக்கிய உணவிலோ பல்லியில்லை. மீதமிருந்த உணவையும் கொட்டி, பருவிப் பார்த்தார்கள். அதிலும் இல்லை.
                    கணவன்பாடு திண்டாட்டமாகிவிட்டது.
                    அன்றிலிருந்து பல்லி அவனுடைய உடலில் எங்கோ இருந்துகொண்டு இருப்பதுபோலத் தோற்றம். அதனால் பலவகைக் கற்பனைகள். சாப்பாடு செல்லவில்லை. அடிக்கடி வாந்தி
எடுத்துப் பார்த்தான். அடிக்கடி
பேதி மருந்தைச் சாப்பிட்டுவிட்டு, மலப்பரிசோதனை செய்தான்.
பல வைத்தியர்களைப் பார்த்தான். பலவகையான மருந்துகளைச் சாப்பிட்டான்.


                    "ஏதோ அவெஸ்ஸ்ஸ்த்தெயும் பெர்வாயில்லை", என்று எந்தக் காதல் பெஸ்ஸாஸ்ஸ¤விடமும் அவனால் சொல்லமுடியவில்லை. அவஸ்தை குறைந்தால்தானே சொல்வதற்கு?

                    ரொம்பவும் மெலிந்துபோனான். கண்ணெல்லாம் உள்ளடங்கி, பஞ்சடைந்து, விலா எலும்பெல்லாம் புடைத்துத் தெரிய விளங்கினான்.

                    அப்போது ஒரு புதிய வைத்தியர் அவ்வூருக்கு வந்தார்.

                    அவரிடம் காட்டியபோது, அவர் ஒரு மருந்தைக் கொடுத்தார்.
                    "இந்த மருந்து ரொம்பவும் விசேஷமானது. பேதி ஆகும். உடலின் எந்த பாகத்தில் எந்த
நச்சு இருந்தாலும் வெளியில் கொண்டுவந்துவிடும்", என்றார்.

                    "இதைச் சாப்பிட்டுவிட்டு, சட்டியில் மலம் கழித்து, உடனேயே அதனை மூடி, அப்படியே எடுத்து என்னிடம் கொண்டு வா", என்று உத்தரவிட்டார்.
                    அவன் அந்தப் பக்கமாகச் சென்றவுடன் வைத்தியர் அவசரம் அவசரமாக ஒரு பல்லியை அடித்தார். அதனை ஒரு சட்டியில் இருந்த அமிலத்தில் ஊறவைத்தார்.
                    கணவன், வீட்டுக்குச் சென்று மருந்து சாப்பிட்டுவிட்டு சட்டியில் மலத்தை மூடி வைத்தியரிடம் எடுத்துவந்தான். மனைவியும் உடன் வந்தாள்.
                    அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சென்று, அமிலத்தால் உருக்குலைந்திருந்த பல்லியை மலச்சட்டியில் போட்டு, எடுத்து வந்தார்.
                    கணவன் மனைவி ஆகியோரிடம் சட்டியைத் திறந்து பரிசோதிப்பதுபோல பாவலாக்
காட்டி, உருக்குலைந்த பல்லியை எடுத்தார்.

                    "இதோ பார். நீ விழுங்கிய பல்லி. உள்ளே செருகியிருந்தது. இதோ வெளியில் வந்து
விட்டது. ஆனால் நாள்பட்டுப்போச்சல்லவா? ஆகவே உருப்படியில்லாமல் இருக்கிறது. இனிமேல் பயம் வேண்டாம். இன்னும் சற்று நேரத்தில் கபகபவென்று பசிக்கும். நன்றாகச் சாப்பிடுவாய். இரண்டே வாரங்களில் பெருத்துவிடுவாய். பயப்படாதே", என்று அனுப்பிவைத்தார்.

                    அதே போல பசித்தது. முடிந்தமட்டும் சாப்பிட்டான்.
                    இரண்டே வாரங்களில் பழைய நிலையை அடைந்துவிட்டான்.

                    இது என்னுடைய சிறு வயதில், என்னுடைய ஆசிரியர் சுப்பிரமண்ய சாஸ்திரியார்
சொன்ன கதை. அது உண்மைச் சம்பவம் என்று அவர் சொன்னார்.



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU