புதுக்குளத்து ரசம்
ஒரிஜினல் உவேசாமிநாதய்யர்
தழுவல் + விரிவாக்கம்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மலேசியா
JayBee



DIWAN SESHAIAH SASTHRIGAL
OF
PUDUKKOTTAI



                உவேசாமிநாதய்யர் எழுதியுள்ள சம்பவங்களில் ஒன்று 'புதுக்குளத்து ரச'த்தைப் பற்றியது.
                திவான் சேஷையா என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஸர்க்கீல்/திவானாக இருந்தவர்.
                திவான் என்னும் உயர் பதவி நாட்டுக்கு நாடு மாறும். பெரும்பாலும் அது பிரதம மந்திரி/நிதி அமைச்சர் ஆகியோரின் அதிகாரங்கள் படைத்தது.
                நாட்டு மன்னருக்கு அடுத்தபடியாக அதிகாரம் உள்ளவர் திவான்.
               பல சமயங்களில் திவானே சர்வாதிகாரியாக இருப்பார்.
               ராசா....?
                ச்சும்ம்ம்மா...... ச்சும்ம்ம்மா....

                திவான் சேஷையா சாஸ்திரிகளிடம் ஒரு செட்டு சமையற்காரர் வந்திருக்கிறார்.
                செட்டு சமையற்காரர்கள் என்போர் செட்டிநாட்டு வட்டாரத்தில் அதிகமாக இருப்பார்கள். பெருங்கொண்ட விருந்துகளுக்கும் அன்னதானங்களுக்கும் சமைப்பவர்கள். அவர்களிடம் மெனுவைச் சொல்லிவிட்டு, அவர்கள் கேட்கும் சாமான்களை  வாங்கிக் கொடுத்துவிடவேண்டும். எடுபிடிக்கு ஆட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையெல்லாம் தயார் செய்து கொடுக்கவேண்டும். பணத்தையும் பேசிக்கொள்ளவேண்டும்.

                அவ்வளவுதான்.

                கரண்டி போன்ற உபகரணங்களுடன் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில்  அவர்களுடைய சமையற் குழுவுடன் வந்து இறங்கி, தேவையான அளவுக்கு அனைத்து சமாசாரங்களுடன் விருந்தைத் தயாரித்து விடுவார்கள்.
                ஒரு package deal ஆக, செட்டாக அவர்கள் சமையலைச் செய்வதால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது.
                செட்டிநாட்டு வட்டாரத்தில் சாதாரண விருந்துச் சாப்பாடேகூட பெரியதாக இருக்கும். ஏழுவகைக் கறிகள், நெய், பருப்பு, சாம்பார், பெருங்குழம்பு, இளங்குழம்பு, ரசம், சூப்பி எனப்படும் சூப், தயிர், பாயசம், அப்பளம், வடை, வடகம், வற்றல், ஊறுகாய் முதலியவை இருக்கும். நான்வெஜிட்டேரியன் உணவு என்றால் அது சம்பந்தப்பட்ட அயிட்டங்கள் இருக்கும்.
               இந்த மாதிரி சாப்பாடுகள் அடிக்கடி அதிகமாக இருக்கும்.
                மேலும் கோயில் உற்சவங்களில் போடப்படும் அன்னதானங்களும் பெருமளவில் இருக்கும்.
                ஆகவே செட்டு சமையற்காரர்களுக்குக் கிராக்கி நிறையவே இருக்கும்.
                அந்த செ.ச.காரர் தன்னுடைய நளபாகத் திறமையைப் பற்றியெல்லாம் திவான் சேஷையாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
                அப்போது ஏற்பட்ட சிறு விவாதத்தில், 'தேவையான சாமான்களைக் கொடுங்கள். இவ்வூர் புதுக்குளத்தில் ரசம் வைத்துக் காட்டுகிறேன்', என்று சவால் விட்டிருக்கிறார்.
                திவான் உடனே 'டீல்' செய்துவிட்டார்.
                இந்த மாதிரியான சவால்களையெல்லாம் அந்தக் காலங்களில் செய்வார்கள்.
                அப்ப இருந்த ஆட்களே வேறு.
                அப்ப மாதிரியா இப்ப?
                சிங்கம்புணரியில் சோட்டாபாய் என்றொரு தையல்காரர் இருந்தார். அவர் ஒன்றேகால் அடி நீளத்தில் ஒரு கத்திரிக்கோல் வைத்திருந்தார். "சீம ஓடு இருக்குல்ல சீம ஓடு... அதுக்கு ஒர தப்பெண்டா நானு...!" என்பார்(சீமை ஓட்டுக்கு உரை தைப்பேண்டா
நான்). சீமை ஓடு நெளிவு சுளிவுகளுடன் இருக்கும்.
                அப்போது சேஷைய சாஸ்திரிகளால் தோற்றுவிக்கப்பட்ட, புதுக்கோட்டையை நவீன மயமாக்கும் பெருநகர்த்திட்டத்தில் அகழப் பட்டதுதான் புதுக்குளம்.
                அப்போது கடும் கோடைக்காலம்.
                புதுக்குளத்தில் இருந்த சிறிது நீரையெல்லாம் இறைத்து அகற்றினார்கள்.
                தரையை நன்றாகக் காயவிட்டார்கள்.
                பின்னர் உப்பு புளி மிளகாய், தாளித சாமான்கள், காய்ச்சிய எண்ணெய், ஆகியவற்றை யெல்லாம் குளத்தில் பற்பல இடங்களில் ஆங்காங்கு போட்டு வைத்தார்கள். பின்னர் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை அருகிருந்த கிணறுகளிலிருந்து இறைத்து புதுக் குளத்துக்குள் விட்டார்கள்.
                குளத்துக்குக் கடுங்காவலைப் போட்டுவிட்டு, அப்படியே விட்டுவிட்டார்கள்.
                சில நாட்கள் அவ்வாறு ஊறி, கடும் வெய்யிலில் காய்ந்து, பக்குவமாகியது.
                பின்னர் திவானை அழைத்து செ.ச.காரர் அழைத்துவந்து குளத்திலிருந்த  திரவத்தை எடுத்து, ஊற்றிக்கொடுத்தார்.
                திவான், அது ரசமாகியிருப்பதைக் கண்டாராம்.

             "ரசத்தில் சேர்மானம் செய்யப்பட்டிருக்கும் சாமான்கள் கெட்டுவிடமாட்டாதா?", என்ற கேள்வி எழக்கூடும்.

             சாமான்கள் கெட்டுவிடாது. வெறும் புளி ரசத்தில் கெட்டு விடக்கூடிய பொருள்கள் சேர்வதில்லை. தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், பருப்பு ரசம் என்றால் யோசிக்கலாம்.
            சலித்துப் போய்விடுமளவுக்கு அதில் ஒன்றுமில்லையே.
            பெருங்காயமோ, மல்லியோ, கடுகோ கெடமாட்டாவே. மேலும் புளியும் உப்பும் நல்ல ப்ரிஸர்வேட்டிவாச்சே!
            மேலும் கடுங்கோடையில் இரவிலும் வெப்பமிருக்கத்தானே செய்யும். சுற்றிலும் உள்ள கடின தரையில் சார்ந்த பகல் உஷ்ணம் அனைத்தும் குளத்துக்குள் கிடக்கும் நீரில்தானே இறங்கும்.
            அப்படியே குளிர்ந்தாலும், குளிரினால் கெடக்கூடியவைதான் அதில் இல்லையே.
            மீண்டும் அடுத்த நாள் சூடேறிவிடுகிறதே.

            குளத்தின் பரப்பளவு X 104 degrees X No. of day-time hours X No. of days என்று ஒரு ·பார்முலாவைப் போட்டு calory கணக்கில் சூட்டை ஏற்றிப்பாருங்கள்.

            பெரிய பெரிய காண்டா அடுப்புகள், நெருப்பு, போன்ற தடாலடி சமையல் பீம பாகத்தில்தான் உண்டு.
            நெருப்பு இல்லாமலோ அல்லது குறைவான நெருப்பைக் கொண்டோ சமைப்பது நளபாகத்தில் உண்டு. நீங்கள் செய்யும் சாலாடு, ஐஸ்கிரீம், பீச் மெல்பா வகையறாக்கள் எல்லாம் நளபாகம்தான்.
                        
            புதுக்குளத்தில் ரசமா?

            சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$