தாசி பொன்னிக்குக்
கம்பன் அடிமை


டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா

  
                    சோழநாட்டை பொன்விளையும் பூமியாக மாற்றிய காவிரி ஆற்றையும்கூட பொன்னியென்றே கூறுவார்கள். சோழநாட்டை பொன்னிவளநாடு என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.
                சோழநாட்டின்மீத் படையெடுத்து அழித்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியத்தேவருடைய மெய்கீர்த்தியில்:

'பொன்னிசூழ்வளநாட்டில் புலியாணை போயகல
கன்னிசூழ்வளநாட்டில் கயலாணை மீண்டுவர'

என்று காணப்படும். 

               சோழமன்னனின் அரசவையில் ஒருகாலத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் மிகவும் செல்வாக்காக இருந்தார்.

                 கம்பரின் பேரில் பொறாமை கொண்டவர்கள் அக்காலத்தில் மிகுதியாக இருந்தார்கள்.
                 கம்பரின் பெருமையைக் குலைக்க அவர்களெல்லாம் சூழ்ச்சியொன்றைச் செய்தார்கள்.
                சோழமன்னனின் அரசவையின் சிறந்த நாட்டியக்காரியாக அக்காலத்தில் பொன்னி என்னும் தாசி விளங்கிவந்தாள். அவளுடைய உதவியை சூழ்ச்சிக்காரர்கள் நாடினார்கள் . அவர்களுடைய திட்டத்தின்படி பொன்னி கம்பரைச் சந்தோஷப்படுத்தி, சமயம் பார்த்து, ஓர் ஓலையில் அவரிடமிருந்து கீழ்க்கண்டவாறு எழுதி வாங்கிக்கொண்டாள்:

                'தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை'.

                    அந்த வாசகத்தின்கீழ் கம்பர் தன் கையெழுத்தை இட்டுக்கொடுத்தார்.
                    அடுத்தநாள் இந்த ஓலை அரசவையில் அனைவரிடமும் காட்டப்பட்டது. (இந்த மாதிரி விஷயங்களெல்லாம் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஒரு வித்தியாசம். அந்தக் காலத்தில் பத்திரிக்கை கிடையாது).
                    அரசனுக்கு வேதனையும் ஆவேசமும் ஏற்பட்டன.
                    கம்பரை அனைவர் முன்னும் இதுபற்றிக் கேட்டான்.
                    கம்பர் அந்த ஓலையை வாங்கி முதல் எழுத்தான 'தா'வுக்கும் இரண்டாம் எழுத்தான 'சி'க்கும் இடையே மிகச் சிறியதொரு கோட்டினைத் தன் சுண்டுவிரலின் நக நுனியால் இழுத்துவிட்டார்.
                    அரசனிடம் அதனை மீண்டும் கொடுத்துப் படிக்கச்
சொன்னான்.
                    'தா-சி பொன்னிக்கு கம்பன் அடிமை', என்று படிக்கப்பட்டது.
                    கம்பர் விளக்கினார்.    
                    'தாய் ஆகிய ஸ்ரீ ஆகிய பொன்னி ஆகிய லட்சுமிக்குக்
கம்பன் அடிமை' என்று விளக்கம் கூறினார்.
                    ஸ்ரீ என்பது அக்காலச்சொல்வழக்கில் சி என்றும் எழுதப்பட்டது.
                    பல கல்வெட்டுக்களில்கூட இவ்வழக்கைக் காணலாம்.
                    தாய் ஸ்ரீ என்பது நடைமுறைப் பழக்கத்தில் தாசி என்றும் வரும். இவ்வாறு விளக்கித் தப்பித்துக்கொண்டார் கம்பர்.
                    உண்மைதான்.
                   'பொன்னுக்குப் பாடியவன் கம்பன்'. என்று கூறப்படுவதைப் பார்த்தால் ஸ்ரீதேவிக்குக் கம்பன் அடிமை என்று கூறுவதுதானே பொருந்தும்?   

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$