மூவுலகும் இடறியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சுகின்றான்
கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறலும் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினை தீர
அருள்கொழிக்கும் கமலக்கண்ணாய்
கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என
வணக்கம் செய்வான் மன்னோ
மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெரும்சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ
மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுறக்கு மன்னர்தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகை துரந்து வெஞ்சமரில்
வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டு றையும் அணியிழை நின்
அருள்நோக்கம் அடைந்து ளாரே
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
எழில்மேனி திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவணன்றோ மல்லல் வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா
இலக்குமி தோத்திரப் பலன்
என்று தமிழ்க்குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
"நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்".
$$$$$$$$$$$$$$$$$$