கணக்கெழுதிய பிள்ளையார்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மலேசியா





   
            கங்கை கொண்ட சோழராகிய ராஜேந்திர சோழர் தாம் கங்கைகொண்ட பெருவெற்றியின் நினைவுச்சின்னமாக இதுவரை யாருமே  கட்டியிராத ஒரு பெருங்கோயிலைக் கட்டவேண்டும்
என்றும் அது அற்புதக்கலையழகு கொண்டதாகவும் பிரும்மாண்டதாகவும் அமையவேண்டும்
என்றும் திட்டமிட்டார். கங்கையிலிருந்து பொற்குடங்களில் அபிஷேக நீரைக் கொண்டுவரச்செய்து கோயிலுக்குக் குடமுழுக்குச்செய்யவேண்டும் என்று  எண்ணினார். அத்துடன் அதன் அருகே அவர் நிர்மாணிக்கும் பெரும் ஏரி  ஜலமயமானதொரு வெற்றித்தூணாக விளங்கவேண்டும் என்றும் விரும்பினார். 
            கங்கை கொண்டசோழபுரத்துப் பெருங்கோயிலின் கட்டுமான வேலை    தொடங்கிவைத்தார். ஆனால் பலநாட்களாகியும் அதுதொடர்பான கணக்குகளை அவ்வப்போது அதற்குரிய அமைச்சர் ஒப்பிக்கவில்லை.
            இது பற்றி    ராஜேந்திரசோழரிடம் வத்தி வைத்துவிட்டார்கள்.  
            திடீரென்று அந்த அமைச்சரிடம் சோழர் அதுவரை ஆகியுள்ள செலவிடு கணக்கைக் கேட்டார்.
    கணக்கு வைத்திருந்தால்தானே ஒப்பிக்க   காலத்தவணை கேட்டுக்கொண்டு அமைச்சர் வந்து
    விட்டார்.
            அவர் கணேசபக்தர்.
            விநாயகர் அன்றிரவு அவருடைய கனவில் வந்து, "கணக்கை உன்னுடைய உதவியாளர்
    ஒப்பிக்கப் போவதாகச் சொல்லிவிடு" என்று கூறினார்.
            அவ்வாறே அமைச்சர் பேரரசரிடம் சொல்லிவிட்டார்.
            குறிப்பிட்ட நாளன்று அமைச்சரவையில் கூடியிருந்தபோது, ஓர் இளம் கணக்கர் வந்து,
    "அமைச்சர் பின்னால் பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார். அடியேன் கணக்கை ஒப்பிக்க உத்தரவு."         என்று சொல்லிவிட்டு, கணக்குச் சுவடியைப் பிரித்தார்.
            கணக்கை வாசிக்க ஆரம்பித்து, "எத்து நூல் எண்ணாயிரம் பொன்" என்று சொல்லி நிறுத்தினார்.
            பேரரசருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
            கற்களை ஒழுங்குசெய்து அளவு பிடிக்கும் நூலை 'எத்து நூல்' என்று சொல்வார்கள்.        அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட கோயிலுக்கு எத்துநூலே எண்ணாயிரம் பொன் ஆகியிருக்கிறது என்றால்? அவர் கட்ட நினைத்திருந்த அந்த விண்முட்டும் விமானமும், கலையம்சம் நிறைந்த
கோயிலும், அதன் பரப்பும், அவர் கற்பனைக் கண்களின்முன் விரிந்தன. கணக்குப் பார்க்கக்கூடிய அமைப்பா அது? கணக்குப் பார்த்துப் பார்த்துக் கட்டினால் அது என்ன ஆகும்? சிறப்பாக அமையுமா? செலவுக்குப் பயந்து கட்டினால் தம்முடைய
நனவில் சிருஷ்டி செய்து வைத்திருந்த அந்தக் கோயில்தான் முழுமையாக உருப்பெறுமா?"
            அயர்ச்சியுடன் மயங்கி அமர்ந்திருந்த சோழர், திடீரென்று தன்னுடைய தலையைச் சற்று உலுக்கிவிட்டுக்கொண்டார்.
            "போதும், கணக்கரே, இது போதும். சுவடியைக் கட்டலாம்", என்று சொல்லியனுப்பி
விட்டார்.
            அந்த இளம்கணக்கர் அவையைவிட்டு புன்னகையுடன் வெளியேறி மறைவதற்கும்
அமைச்சர் அவைக்குள் நுழைவதற்கும் சரியாகயிருந்தது.
            அந்த விநாயகர்தான் இப்போது கும்பகோணத்தில் சன்னிதிகொண்டிருக்கும்
"கணக்கெழுதிய பிள்ளையார்".


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU