அபூர்வ எழுத்தாளர்
பிலோ இருதயநாத்

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
மலேசியா



                பிலோ இருதயநாத் என்பவர் தமிழர்களிலேயே தனித்தன்மை வாய்ந்ததோர் எழுத்தாளர். அவர் போல அன்றும் வேறு யாரும் இருந்ததில்லை. இதுவரைக்கும் யாரும் இருக்கவும் இல்லை என்று தைரியமாகக் கூறலாம்.
                அவரைப் பற்றி சில நூல்களிலிருந்து திரட்டி, கீழே எழுதியுள்ளேன்.
                காடுமலைகளிலெல்லாம் அலைந்து ஆதிவாசிகள், மலக்குடி மக்கள் முதலியவர்களைப் பற்றி எளிய தமிழில் புரியும்வண்ணம் விளக்கமாக எழுதுவார்.
                ஆரம்பத்தில் அவர் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகத்தான் விளங்கினார். பின்னரே அவர் மானிடவியலில் புகுந்தார். ஐம்பதாண்டுகளாகத் தொடர்ந்து பல சுற்றுப் பயணங்களைச் செய்து பல மாதிரியான பழங்குடி மக்களைச் சந்தித்து பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.
                ஆனந்தவிகடனில் அறுபது வருடங்களுக்கு முன்னர் அவருடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவந்ததுண்டு.
                அவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டே, நேரம் கிடைத்தபோதெல்லாம் இந்த ஆராய்ச்சியைச் செய்துகொண்டே இருந்திருக்கிறார்.
                1916-ஆம் ஆண்டில் பிறந்தவர்.
                காடுமேடுகளிலெல்லாம் அலைந்து, பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரே anthroplogist இந்தியர் இவர் ஒருவர்தான். 3000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரைகளைக் கிட்டத்தட்ட
70
இதழ்கள் தாங்கிவந்துள்ளன. 63 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றுள்
37
மட்டுமே வெளிவந்துள்ளன.        
                மீதியுள்ளவை அப்படியே கையெழுத்துப் பிரதிகளாகத் தூங்கிக்கொண்டு இருந்தன. இதனை ஆண்டுகள் கழித்து இன்னும் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை.
                மானிடவியலில் ஆதிவாசிகள் மலைக்குடியினரைப் பற்றி மட்டுமே இவர் ஆராய்ச்சி செய்துள்ளார் என்று முடிவு கட்டிவிடக்கூடாது.
                பல்லவ மரபும் திப்பு சுல்த்தானின் வழியினரும் இன்றும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்.
                மனிதர்களைப் பற்றி மட்டுமே தம்முடைய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. வேடன் தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச்செய்து promote செய்தவரும் இவர்தான்.

                பாரத மத்திய அரசு, தமிழக அரசு, யூனெஸ்கோ ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றவர்.
                விக்கிரமாதித்தனைப்போலவே இவரும் காடாறு மாதம், நாடாறு மாதம்
என்று வாழ்க்கையைக் கழித்தவர்.
                காட்டில் உள்ள அபாயங்களைக் கண்டு அஞ்சாமலும் அவற்றின்
தன்மைகளை நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப நடந்துகொள்வதில் நிபுணர். காட்டுவாசிகளின் மனோதர்மத்தையும் உளவியலையும் அறிந்து, அவர்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும் நம்பிக்கைகளுக்கு ஏற்பவும் தெரிந்து நடந்துகொள்ளும் பக்குவமும் அவருக்கு இருந்தது. அத்தனைத் தகவல்களையும் சேகரித்து அவற்றைத் தொகுத்து, ரசிக்கக்கூடியவகையில் எழுதிவெளியிட ஓர் அலாதியான  நுண்ணறிவும் தனித்தன்மை பொருந்திய லாகவமும் திறமையும் வேண்டும். சரடுகள் கலக்காமல் திரட்டிய தகவல்களை மட்டுமே உண்மையுடன் எழுதும்  மன உரமும் வேண்டும்.
                இவையெல்லாமே இருதயநாத்திடம் இருந்தன.
                அவர் செய்த அந்த ஆராய்ச்சியை அவர் ஒரு கர்மயோகமாகத்தான் செய்துவந்தார். அவரைத் தேடிவந்த புகழும் விருதுகளும் அவையாகவே அவரைத் தேடிவந்தவை. அவர் அவற்றைத் தேடி அலையவுமில்லை. அவற்றுக்காக அந்த ஆய்வுகளைச் செய்யவும் இல்லை.  
                அவருடைய கர்மயோகத்தைப் பற்றி அவரே சொல்லக் கேட்போம்:

                'தும்பிகள் பூக்கள்தோறும் பறந்து சென்று தேனைச் சேகரித்து வைத்தால் அதைக் காடர்கள் எடுத்துக் குடித்து மகிழ்வதுபோல, நானும் பல காடுகளுக்குச் சென்று, பசி தாகம் பாராமலும், காட்டு வாழ் மக்களோடு கூழ் குடித்தும், அதனால் சிலபொழுது எனக்கு நேர்ந்த வயிற்று உளைச்சலையும் - பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சுற்றிப் பலவகை மக்களிடமிருந்து பல வியக்கத்தக்க பழக்க வழக்கங்களும் - சிறந்த பண்புகளும் பற்றிய தகவல்களாகிய தேனைச் சேகரித்துக் கொண்டு வந்து நிறைத்த பல கட்டுரைகள்.........'

                ".......அந்தக்காலத்தில் ஆங்கில அரசினரும் பல பாதிரிமார்களும் நவீன நாகரிகம் அறியாமல் மலையிலும், காடுகளிலும் மறைந்து வாழும்  மக்கள் சிலரின் சமூகத்தை ஆராய்ந்ததுடன், அவர்களிடம் சீர்திருத்தம் செய்யப் புகுந்தார்கள். அங்ஙனம் புகுந்தவர்கள் தாங்கள் தெரிந்துகொண்ட சில செய்திகளை ஓரளவுக்கு ஆங்கிலத்தில் எழுதினார்கள். ஆனால் அவர்கள் எழுதியவை சங்ககால நூல்களையும் காடர்களின் மொழிகளையும் தெரிந்துகொண்டு எழுதியவையல்ல.'

                '..........இந்த நிலையில் நான் இந்தியக் காடுகளைச் சுற்றி, அவற்றில் வாழும் பழங்குடி மக்களிடமும் பழகி, காட்டைவிட்டு வீட்டை அடைந்ததும் அவர்களுடைய வரலாறுகளை ஆராய்ந்து பழங்காலத்து நூல்களையும், கல்வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு, பல குறிப்புகளையும் துருவித்துருவிச் சான்றுகள் கண்டு, அந்தந்தப் பழங்குடிகளின் கருத்துக்கு மாறுபடாமல், என் வாழ்க்கைப் போராட்டத்தினிடையே கிடைத்த சிறிதளவு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு எழுதிய கட்டுரைகள்....'

                'நான் 'மானிட இயல் துறை' பயின்று பட்டம் பெற்றவனும் அல்லன். ஆயினும் பழைய காட்டுமக்களைப் பற்றியும் பழங்குடிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமே, சில காடுகளுக்குச் செல்லத் தொடங்கினேன். பஸ் வசதியும், வண்டி வசதியும், இன்று இருப்பதுபோல, அன்று இல்லை. நடந்தும், வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரியிலும், யானையின் சாணத்தைச் சேகரிக்கக் காடுகளுக்குச் செல்லும் லாரியிலும் மாட்டுவண்டியிலும் ஏறிச் சென்றேன்.'  
                'ஓரளவுக்கு பொதுமக்கள் யாவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற கருத்துடன், ஒவ்வோர் இனத்தாரைப் பற்றியும் வரலாற்றுச் சான்றுகள் கொடுத்து, எம்மதத்தினருக்கும் மனம் புண்படாத வண்ணம் நடுநிலையோடு எழுத விரும்பினேன். எனவே இயன்ற வரையில் ஒவ்வோர் இடத்துக்கும் நேரில் பிரயாணம் செய்து, ஒருமுறைக்கு ஒன்பதுமுறை அந்த மக்களைக் கேட்டுச் சந்தேகங்களை நீக்கிக் கொண்ட பின்னரே, சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதிய கட்டுரைகள்.....'
                'உலகத்தில் மொழியில்லையென்றால் நாகரிகமே தோன்றியிருக்காது. ஆகையால் காடர்களின் நாகரிகத்தைப் பற்றிய முழுவிபரங்களையும் அறிய
வேண்டி அவர்களுடைய மொழிகளைப் பற்றியும் ஏதோ சிறிது தெரிந்து
கொண்டேன்.
                அவர்களுடைய உணவுகளை உண்டு பழகிக்கொண்டேன். காட்டில்
வாழும் மக்களிடையே வழங்கும் மொழிகள் எப்படித் தோன்றின என்று அறிய
நானும் அவற்றுள் சில மொழிகளைக் கற்றும் எழுதியும் வந்துள்ளேன்.'
                "மேலும் மேலும் எனக்கு ஆராய்ச்சித்துறையில் ஊக்கமளித்த மறைந்த உயர்திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கும் உயர்திரு சாண்டில்யன் அவர்களுக்கும்....என் நன்றி கலந்த வணக்கம"'.

                அவருடைய நூல்களில் பல இடங்களில் புறநானூறு, அகநானூறு,
 குறுந்தொகை போன்ற சங்க நூல்களிலிருந்து பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
                ஓர் அரசின் அல்லது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையினர் எடுத்துச்செய்யவேண்டிய பெரும்பணியை, ஒரு தனி மனிதனாய் நின்று, பொருட ்செலவையும், பிரயாசையையும் களைப்பையும் தவிப்பையும், கண்விழிப்பையும், உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் 'முயற்சி திருவினையாக்கும்',  'கருமமே கண்னாயினார'் என்ற என்ற முதுமொழிகளுக்கேற்ப,  முயன்று முடித்தவர் பிலோ இருதயநாத்.  

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU