ரசவாதம்

            சாக்தஸ்ரீ டாக்டர் எஸ். ஜெயபாரதி
    (ஜேய்பி)
    மலேசியா

    பொன்னை விரும்பும் பூமியிலே பொன்னைத்தேடித் தோண்டிச்
சளைத்தவர் பலர். தண்ணீரிலிருந்தும் அரித்தெடுத்துப் பார்க்கின்றனர்.

    இது போதாததற்கு பொன்னைச் செயற்கையாகச் செய்வதிலும்
பல நூற்றாண்டுகளகப் பல நாட்டினரும் ஈடுபட்டுப் பார்த்திருக்கின்றனர்.

    பொன்னைச் செயற்கையாகச் செய்வதை 'ரசவாதம்' என்று
சொல்வார்கள். ரசவாத வித்தைப் பழங்காலம் முதல் தற்காலம் வரைப்
பலநாடுகளிலும் பரவியிருந்த கலையாகும். தமிழ்நாட்டுச் சித்தர்கள்
இதில் தேர்ந்தவர்களாக விளங்கினார்கள். சீனர்களும் அரேபியர்களும்
ஐரோப்பியர்களும் ரசவாதவித்தையைச் செய்து பார்த்தவர்கள்தாம்.

    பாதரசம் இவ்வித்தையில் பயன்பட்டதாலேயே இக்கலையை
'ரசவாதம்' என்று அழைத்தார்கள். ஆங்கிலத்தில் இதனை 'Alchemy'
என்றழைப்பார்கள். 'Khem' என்பது பண்டைய எகிப்தைக் குறிக்கும்
அரபுமொழிச்சொல். அக்காலத்தில் அந்நாட்டிலேதான் மிக அதிகமான
ரசவாதிகள் இருந்தனர் ஆகையால் அந்நாட்டின் பெயராலேயே அந்த
சாஸ்திரத்தையும் 'Kimia' - 'கீமியா' என்றும் 'al-Kimia' - 'அல்கீமியா' 
என்றும் அழைத்தனர். 

    'Alchemy' என்னும் சொல்லும் ரசாயனத்தைக் குறிக்கும்
'Chemistry' என்னும் சொல்லும் அவற்றிலிருந்து ஏற்பட்டவைதாம். 
ரசாயனம் என்னும் சொல்லும் ரசவாதம் என்னும் சொல்லும்
ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.

    ரசவாதத்தில் பலமுறைகள் உண்டு.
    'ஊர்வசி ரஸவாத சிட்சிகா' என்னும் பழைய நூலில் ஒரு முறை
காணப்படுகிறது.

    'போகர் ஏழாயிர'த்தில் வேறு முறை இருக்கிறது.
    இந்த முறைகளில் 'முப்பு', கந்தகம், செம்பு, பூநீர், பாதரசம் போன்றவை கச்சாப்பொருளாகப் பயன்படும். இந்த மாதிரி முறைகளால் இந்த மாதிரி
பலவிதமான நன்மைகள் ஏற்பட்டன. ரசவாத
ஆராய்ச்சியின் விளைவாக
பலதரப்பட்ட ரசாயனப்பொருள்களும்
மருந்துகளும் தோன்றின.

    'ரசவாத கெட்டால் மருந்துக்காகும்' என்ற பழமொழி ஏற்பட்டது.
ரசவாதிகள் சித்தர்களாகவும் மருத்துவர்களாகவும்,
சோதிடர்களாகவும் பல்துறைப்பேரறிஞர்களாகவும் விளங்கியதால் பலவகைப்பட்ட
சித்தாந்தங்களும் குறித்து தத்துவநூல்களும்
ஏற்பட்டன.
   
    சிலர் செம்பைப் பொன்னாக்கினர் .சிலர் பாதரசத்தையும், வேறு சிலர்
காரீயத்தையும் பொன்னாக்கினர். சிலர் மூலிகைச்
சாறுகளையும்
பயன்படுத்தினர். வேறு சிலரோ மந்திரங்களைப்
பயன்படுத்தினர்.
இன்னும் சிலர், மனத்தில் நினைத்தமாத்திரத்திலேயே
சாதாப ்
பொருள்களைப் பொன்னாக்கி வியக்கவைத்தனர்.


    நவீன ரசாயன விதிகளின்படியும் பௌதிக விதிகளின்படியும்
செயற்கையாகத் தங்கம் தயாரிக்கமுடியுமா?

    ரசவாதம்#2

    நவீன ரசாயன விதிகளின்படியும் பௌதிக விதிகளின்படியும்
செயற்கையாகத் தங்கம் தயாரிக்கமுடியுமா?

    முடியும். பாதரசம், காரீயம், பிலட்டினம், தங்கம் ஆகியவற்றின்
அணுத்தொகுப்பையும் அணுத்துகள்களின் தொகுப்பையும்
அணுச்சிதைவுமூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம் என்பது
தத்துவார்த்தரீதியில் சாத்தியமாகலாம். ஆனாலும்கூட அதனைச்
சாதிப்பதற்குரிய கருவிகள் இன்று நம்மிடையே கிடையாது. ஓர்
ஊசி முனையளவு தங்கம் செய்யப் பலகோடி டாலர்கள் செலவிட
வேண்டிவரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    ரசவாதத்தின்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகள் நோய்களில்
பலவற்றைக் குணப்படுத்தப் பயன்பட்டன. சில
மருந்துகள்
காயகல்பத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. 'காயம்'
என்றால் உடல். 
உடலை இளமையுடன் கெடாமலும் நோயணுகாமலும்
நீண்டகாலத்திற்கு வைத்திருந்து உயிரோடிருத்தலையே 'காயகல்பம்' என்று கூறுகிறோம்.
காயகல்பத்தில் மருந்துகளுடன் பல
யோகமுறைகளும்  எடுத்தாளப்பட்டன.

    சாவைத் தவிர்த்து சிரஞ்சீவித் தன்மையை நல்கும் மருந்துகளையும்கூட காயகல்பவாதிகள், ரசவாதிகள் ஆகியோர் பன்னெடுங்காலமாகக்
கண்டுபிடிக்க முயன்றவாறு இருக்கின்றனர்.
'அமிர்த சஞ்சீவி' என்று
இந்தவகை மருந்துகளை அழைத்தனர். 
இவ்வகையில் மந்திரங்கள்கூட
இருந்தன. பலவகையான
யோகசமாதிமுறைகளையும் அவர்கள்
கடைப்பிடித்தனர்.
'Elixir of Life' என்பதும் 'Philosopher's Stone' என்பதுவும்
இவ்வகை மருந்துகளைக் குறிப்பனவாகும்.

    'பிரம்மராக்ஷஸ்' என்னும் அற்புதமான சிறுகதையைப் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதில் மேற்சொன்ன சில விஷயங்கள் வரும்.
   
    வேறு சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப்பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர். இதையே
'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்',
'இன்பரசவாதம்',
என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.

சூ·பி ஞானிகள் இதனை 'கீமியா -ஏ-ச'ஆதத்' என்று குறிப்பிடுவார்கள்.

    இயற்கையிலேயே பொன்னாக இருப்பது ஒருநிலை. ரசவாதத்தின ்மூலம் உருமாறித்தோன்றிய பொன் இன்னொரு நிலை. இவ்வாறு இரண்டு
நிலைகளில் பொன் இருக்கிறது.

    அதுபோலவே, 'இறைப்பொருள்' என்பது ஒருநிலை. பரிசுத்தமான
ஆன்மா, கர்மங்களின் உபாதிகள் அற்று இறைத்தன்மையை
அடையும்
நிலையாகிய 'கைவல்யம்' என்பது இன்னொரு நிலை.

    செம்பு இயற்கையில் களிம்பு ஏறும் தன்மையைக் கொண்டது.
பொன்னுக்கு அந்தக்குற்றம் கிடையாது.
    ரசவாதத்தின்மூலம் களிம்பே ஏறாத பக்குவநிலையடைந்த செம்பு
பொன்னாகும் தன்மையைப் பெற்றுக்கொண்டது. அதுபோன்று
மலங்கள்
பற்றாத நிலையில் ஆன்மா பரிசுத்தமாகி பரமான்மாவாக
விளங்கும்.
இது ஒருவிதமான அத்துவித நிலை.


    செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
    செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
    செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
    செம்பு பொன்னான திருவம்பலவே.

    என்று திருமூலர் கூறியிருக்கிறார். பொன்னைச் சிவமாகவும் செம்பைச்
சீவனாகவும் களிம்பேறும் தனமையை மலங்கள் பற்றும்
நிலையாகவும்
சிலர் உருவகப்படுத்துவர்.


    சிக்கலான தத்துவந்தான். எளிமைப்படுத்திக் கூறியிருக்கிறேன்.
புரிபவர்களுக்குப் புரிந்துவிடும். 

    அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் 'திருவகுப்பு ' என்னும்
தொகுப்பு நூலும் உண்டு. இந்நூலில் 'சித்துவகுப்பு' என்னும் பாடல்
இருக்கிறது. அதில் ரசவாத வித்தையை விவரித்திருக்கின்றார்.
ஆனால் அப்பாடலில் மறைபொருளாக விளங்குவது, 'ஞானரசவாதம்'தான்.

    இம்மாதிரியான ஞான ரசவாத நூல்கள் தமிழில் மட்டுமின்றி சீனத்திலும்
அரபு மொழியிலும் கிரேக்க லத்தீன் மொழிகளிலும்
இருந்திருக்கின்றன.
    'கீமியா எ ச'ஆதத்' என்னும் நூலொன்று பேரின்பரசவாதத்தைப்
பற்றியது. இந்நூல் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.

    ரசவாதம்#3

    ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் பாராஸெல்ஸஸ் -
'Paracelsus' என்னும் ஞானி ஒருவர் இருந்தார்.
இவர் ஒரு பெரிய மருத்துவர்;
அறுவை சிகிச்சையாளர்; ரசவாதி;
ரசாயன மேதை; உலோகநூல் வித்தகர்;
சித்தரும்கூட. இவருடய
நூல்களில் பல அத்வைதக் கருத்துக்களை
வெளியிட்டுள்ளார். பல
நோய்களின் உண்மையான தன்மைகளையும்
அறிந்து முதன்முதலில்
கூறியவர் இவர். பல நவீன சிகிச்சை
முறைகளுக்கும், மருத்துவ
ரசாயனம் எனப்படும் ·பார்மக்காலஜிக்கும்,
சில மனோதத்துவ
முறைகளுக்கும் இவரே முன்னோடியாகத் திகழ்கிறார்.
இவரை
அக்காலத்தில் உள்ளவர்கள் பெரிய மந்திரவாதியாகவும் கருதினர்.

    புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலாகிய 'Extra-sensory Perception -
E.S.P.
' என்னும் சக்தியை பெற்றவர்.

    "தன்னையும் உணர்ந்து, தன்னுடைய அறிவின் ஆற்றலால்
இந்த
பிரபஞ்சத்தின் தன்மையையும் உணர்ந்துகொண்டுவிட்டால்
இந்தப்
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விதிகளையுமே நம்
இஷ்டத்திற்கு
இயக்கமுடியும்", என்று கூறியிருக்கிறார்.

"சுத்தமான மந்திரவாதம் என்பது ஓர் அறிவியல் கொள்கை", என்றும்
சாதித்திருக்கிறார்.


    1541-ஆம் ஆண்டில் இவருடைய உயிரற்ற உடல் காணப்பட்டது. ஆனால்
இவர் இறந்துவிட்டதாக யாரும்
நம்பவில்லை. கூடு விட்டுக் கூடு
பாயும் வித்தையின்மூலம்
வெவ்வேறு உடல்களில் அவ்வப்போது
புகுந்து புகுந்து சென்று
இந்த நானூற்றைம்பது ஆண்டுகளாக
இன்னும் இவர் உயிரோடு
இருப்பதாகவே பலரால் நம்பப்படுகிறது.

    நம்முடைய பண்டைக்காலச் சித்தர்கள் ரிஷிகள் ஆகியோரில் பலர்,
தற்காலக் கணிப்பின்படி விஞ்ஞானிகளாக
இருந்திருப்பார்களோ?
அல்லது இப்படியும் சொல்லலாமோ?
தற்கால விஞ்ஞானிகளில்
பலர் பழங்காலக்கணிப்பின்படி
'ரிஷிகள்', 'சித்தர்கள்' என்றும்
சொல்லலா
ம்

    பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில்
ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும்
வித்தையைக்
கற்க முற்பட்டு, அம்முயற்சியில் தமது  பெருஞ்செல்வம்

அனைத்தையுமே இழந்தார்.
    ஒருநாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க வள்ளலார்
சென்றார்.        .    
    அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்சென்று, அவர்தம் கால்களில்
விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச்
சொல்லி
அழுதார்.

    தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக்
கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

    வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறையத் தண்ணீர் கொண்டு
வருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத்
தண்ணீரில்
கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல்

தண்ணீருக்குள் விழுந்து, தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக

மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட
மாஜி செல்வந்தர், அந்த வித்தையை அப்போதே கற்றுத்தருமாறு
கேட்டுக்கொண்டார்.

    வள்ளலார் சொன்னார்:
    "இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
      ஆனால் ஒன்றே ஒன்று. பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு
மட்டுமே
இந்த வித்தை பலிக்கும்.".

    'ஜ்ஞான விஜ்ஞான த்ருப்தாத்மா
        கூடஸ்த்தோ விஜிதேந்த்ரியா
    யுக்த இத்யுச்யதே யோகீ
        ஸமலோஷ்டாஸ்ம காஞ்சனஹ'

    'ஞானத்தாலும் விஞ்ஞானத்தாலும் மனம் திருப்தியடையப் பெற்றவனும், அசையாதவனும், புலன்களை வென்றவனும், மண்ணையும் பொன்னையும்
ஒரே விதமாக மதிப்பவனுமான யோகி,
"யோகம் நிறையப்பெற்றவன்", எனக் கூறப்படுகிறான்.
   
                                                                                                                        - கீதை - தியான யோகம்.

   
    "வேறு சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி
இறைப்பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப்

பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்',
'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.
சூ·பி ஞானிகள் இதனை 'கீமியா -ஏ-ச'ஆதத்' என்று குறிப்பிடுவார்கள்",
என்று சொன்னேனல்லவா?
    அதன் தொடர்பாக.........

    இமயமலையில் ஞானானந்தர் ஆசிரம் என்றொன்று உண்டு.
அதைப் பற்றிய வரலாறு அது.
   
    அந்த ஆசிரமத்தில் ஆதிகாலத்தில் ஞானானந்தர் என்னும் மகான்
ஒருவர் இருந்தார். அவருக்கு ரசவாதவித்தை தெரியும் என்று எல்லாரும்
பேசிக்கொண்டனர். அதன்மூலம் அவர் இரும்பைப் பொன்னாக்குவார் என்றும்
ஆனால் அந்த வித்தையை அவர் தமது பிரதம சீடனுக்கே சொல்லிக்
கொடுக்கப்போகிறார் என்றும் பேசப்பட்டது.

    அந்த வட்டாரத்தில் இருந்த அமர்சிங் என்பவன் கொடிய
கொள்ளைக்காரன். அந்த வித்தையைக் கற்கவேண்டும் என்று நினைத்தான்.
ஏனெனில் அந்த வித்தை மட்டும் தெரிந்தால் இப்படிச் சிரமப்பட்டுக்
கொள்ளையடித்துக்கொண்டு உயிருக்குப் பயந்து வாழவேண்டாமே.

    ஆகவே அவனும் ஞானானந்தருக்குச் சீடனாக ஆசிரமத்துக்குப்
போய்ச் சேர்ந்துகொண்டான். ஆசிரமத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய
தோற்றத்தை மாற்றிக்கொண்டான். தன்னுடைய பழக்கவழக்கங்களையும்
மாற்றிக்கொண்டான். 

    ஆசிரமத்தின் கட்டொழுங்குகளை மிகவும் ஒழுங்காகக் கடைபிடித்தான்.

    ஞானானந்தர் சொற்பொழிவு ஆற்றும்போதும் தத்துவவிளக்கம்
அளிக்கும்போதும் உபதேசம் செய்யும்பொதெல்லாம் மிகவும் கவனமாகக்
கேட்பான். ஞானானந்தரின் அருகிலேயே எப்போதும் இருந்து அவருக்குரிய
பணிவிடைகளை முன்னின்று முனைப்பாகச் செய்துவந்தான். ஞானானந்தர்
கேள்விகள் கேட்பார். அவற்றிற்குரிய பதில்களைச் சொல்ல
வேண்டுமல்லவா? ஆகவே அவனே பல நூல்களைச் சிரத்தையுடன்
கற்றான்.

    ஞானானந்தரின் தலைமைச் சீடனாக வேண்டுமல்லவா?

அப்போதுதானே அவர் அவனுக்கு ரசவாதத்தைக் கற்றுக்கொடுப்பார்?
ஆகவேதான் அப்படியெல்லாம் செய்தான்.

    பலவகையான யோகநிலைகளைக் கற்றாலே ரசவாதம் கைவரும்
என்று சொல்லக்கேட்டு, அட்டாங்க யோகம், ஜபயோகம் போன்றவற்றை
மும்முரமாகச்செய்தான்.

'சத்யம் வச; தர்மம் சர' - 'சத்தியத்தையே பேசு; தர்மத்தின் வழி நட' என்று
வேதத்தின் சாரம் கூறுவதால் அவற்றையே தன் வாழ்வில் மேற்கொண்டான்.

    இவ்வாறு ஆசிரமத்தில் இருந்தவர்களிலேயே மிகச் சிறந்த சீடனாக
விளங்கினான். தீட்சாநாமமாகப் பெயரையும் ஞானானந்தர்,
'ஆத்மாநந்தன்'
என்று கொடுத்தார்.


    ஞானானந்தரின் உடல்நிலை மோசமாகிவந்தது.
    முன்புபோல அவரால் ஆசிரம நடவடிக்கைகளில் கலந்துகொள்ள
முடியவில்லை.

    ஆகவே ஆத்மாநந்தனே எல்லாவற்றையும் மற்ற சீடர்களின் உதவியோடு கவனித்துவந்தான். சொற்பொழிவுகளும் விளக்கங்களும் உபதேசங்களும்
அவனே செய்யலானான்.

     
    ஆத்மாநந்தரை ஞானானந்தர் பிரதமசீடராக அறிவித்தார்.
அத்துடன் தம்முடைய வாரிசாக ஆசிரமத் தலைமையையும் அவருக்கே
தந்தார்.

    ஞானானந்தர் மகாசமாதியடையும் காலம் வந்தது.
    அப்போது ஆத்மானந்தரை அருகில் அழைத்தார்.
    எல்லாரும் ஞானானந்தர் ஆத்மாநந்தருக்கு ரசவாதவித்தையைப்
போதிக்கப்போகிறார் என்றே எண்ணிக்கொண்டனர்.

    ஞானானந்தர் பேசலானார்:

    "துருப்பிடித்த இரும்பு போன்ற சித்தம் படைத்த அமர்சிங் என்னும்
பயங்கரவாதியை, களிம்பே ஏறாத பசும்பொன்னான ஆத்மாநந்தனாக

மற்றியிருக்கிறேன். இதுதானப்பா நான் இரும்பைப் பொன்னாக மாறச்
செய்த ரசவாதவித்தை".
   
       செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
    செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
               செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
செம்பு பொன்னான திருவம்பலவே.


                                                                                                                                        -திருமூலர்


அன்புடன்

ஜெயபாரதி
>====================================

RETURN TO MAIN MENU