வெற்றி தரும் முருகன் திருக்கை வேல


அருணகிரிந்தாரின் வேல் வகுப்பிலிருந்து
ஒரு பாடல்


சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                        நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் சில ஆயுதங்கள் குறிப்பிடப்
படுவதைக் காணலாம். 
பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், நாரயணாஸ்திரம் என்றெல்லாம் பெயர்கள் அடிபடும்.
                        அவற்றைப் பிரயோகித்தால் என்னமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதும்
அடிக்கடி விளக்கப்பட்டிருக்கும்.

                        அஸ்திரங்களிலேயே மிகவும் வலிமையானவை மேலே குறிப்பிடப்பட்ட
மூன்றும்தான்.

                        இவை தவிர ஒவ்வொரு தெய்வமும் சில சிறப்பான ஆயுதங்களை வைத்திருப்பார்கள்.
                        சிவனுடைய மழு, திரிசூலம், விஷ்ணுவுடைய சுதர்சன சக்கரம், இந்திரனுடைய வஜ்ராயுதம், முருகனுடைய வேல் முதலியவை.

                        சில சமயங்களில் சில ஆயுதங்கள் போதாமற்போனதால் புதிய ஆயுதங்களைத் தோற்றுவித்துப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.

                        தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் அடிக்கடி போர்கள் நடந்தன.
அவற்றைத் தேவாசுரப் போராட்டம் என்று சொல்வார்கள். இவற்றின் நடுவே ஏதோ ஒரு
மாதிரியான ஸீஸ்·பயர் இருந்திருக்கும் சமயத்தில் தேவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும்
ததீசி என்னும் முனிவரிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு கொடுத்துவிட்டுச் சென்றனர்.

                        தெய்வீக ஆயுதங்களுக்கு அடிக்கடி பூஜை போடவேண்டும்; அவற்றிற்குரிய
பலியும் கொடுக்க வேண்டும். இந்த புனஸ்காரங்கள் குறைந்தால் அவற்றில் தேஜஸ்
குறையும்; வேகமும் வலிமையும் குன்றிவிடும்.

                        பல காலமாக தேவர்கள் வந்து கேட்காததால் ததீசி அத்தனை ஆயுதங்களையும் விழுங்கிவிட்டார். அவையெல்லாம் முனிவருடைய முதுகுத் தண்டிற்குள் அடங்கி அதனுடன் கலந்து விட்டன.
                        மீண்டும் திடீரென்று தேவர்கள் கேட்கும்போது, ததீசி தம்முடைய உடலைத் தேவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தாம் யோகநிஷ்டையில் அமர்ந்து ஆவியை நீக்கிக
்கொண்டார்.

                        ததீசியின் உடலிலிருந்து முதுகெலும்பை எடுத்துத் தேவதச்சனாகிய விஸ்வகர்மா மிகச்சிறந்த ஆயுதம் ஒன்றைச் செய்தான். தேவர்களின் அத்தனை ஆயுதங்களுடைய
சக்தியையும் பெற்றது அது.

                        அதுதான் வஜ்ராயுதம்.
                        அதை வைத்து அதன்பின் நடந்த தேவாசுரப்போரில் தேவர்கள் வென்றார்கள்.

                        விஷ்ணுவின் சுதர்சன சக்கரமும் வீரியம் மிக்கது.

                        ஆனாலும் சூரபன்மன் முதலியோருடன் நடந்த போரில் அவை பயன்படாமல் போயின.

                        சூரபத்மனுடைய தம்பியாகிய தாருகாசுரனுடன் நடந்த போரில் விஷ்ணுவின் சக்கரம் தாருகனின் மார்பை நோக்கி ஏவப்பட்டது. ஆனல் அது அவனுடைய மார்பில்பட்டு முனை
மழுங்கிக் கீழே விழுந்துவிட்டது.

                        தாருகன் அதை எடுத்துத் தன்னுடைய மார்பில் ஹாரமாகத் தொங்கவிட்டுக்
கொண்டான்.

                        இந்த ஆயுதங்களெல்லாம் பயனற்றுப்போயின என்பதால்தான் சூரனை அழிப்பதற்கு அம்பிகை தாமே இன்னொரு வடிவமாக ஆகி நின்று அந்த வடிவத்தை வேலாயுதமாக்கி அந்த வேலாயுதந்தன்னை முருகனுக்குக் கொடுத்தாள்.
                        அம்பிகை தன் வடிவமாகிய சக்தி வேலாயுதத்தை முருகனுக்கு வழங்கிய நாள்தான் தைப்பூசம்.

                        வேல் வகுப்பில் அருணகிரிநாதர் பாடுகிறார்:

'வெங்காள கண்டர்கைச்சூலமும் திருமாயன்
    வெற்றி பெறு சுடராழியும்
   விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
    வெல்லா' எனக் கருதியே

"சங்க்ராம நீ சயித்தருள்"எனத் தேவருஞ்
    சதுர்முகனு நின்றிரப்பச்
   சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
    தனியாண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
    கௌமாரி கமலாசனக்
   கன்னி நாரணிகுமரி த்ரிபுரை பயிரவி அமலை
    கௌரி காமாட்சி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகைகொற்றி
    த்ரியம்பகி யளித்த செல்வச்
   சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
    செம்பொன் திருக்கை வேலே!

'சிவபெருமானின் கைச்சூலாயுதமும் திருமாலின் வெற்றிபெறக்கூடிய
சுடர்விடும் சக்கராயுதமும்தேவர்களில் அதிபதி இந்திரனின் குலிசாயுதமும்
சூரனையும் அவனுடைய குலத்தையும் அழித்து வெல்லமாட்டா' தேவர்களும்
பிரம்மனும் நினைத்து, "சங்ராம நீ செயித்தருள்", உன்னைக் கெஞ்சிக்கேட்டதன்படி
கிரவுஞ்ச மலையுடன் சூரபத்மனின் உடலையும் ஒரே நொடியில் உருவிச்சென்று
தனியாண்மை கொண்ட வேல்'.

'கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கௌமாரி கமலாசனக்கன்னி நாரணி
குமரி த்ரிபுரை பயிரவி அமலை கௌரி காமாட்சி சைவசிங்காரி யாமளை
பவானி கார்த்திகை கொற்றி த்ரியம்பகியாகிய அம்பிகை அளித்த செல்வச்
சிறுவனாகிய அறுமுகன் முருகன் அசுரர்களின் குலத்துக்கு அந்தகனாக
விளங்கும் குகனின் செம்பொன் திருக்கையில் விளங்கும் வேலே!'

காக்க காக்க கனகவேல் காக்க!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU